Sunday 30 December 2007

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ளத்தான் நினைக்கிறேன். முடியவில்லை. இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது. இப்படி சிந்தனை ஓடிக்கொண்டிருந்தபோது சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன் ஒருவனுடன் செய்திருந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது. அதை இப்போது பொதுப்பார்வைக்கு வைக்கிறேன்.

முதல்முறை இலண்டன் வந்தபோது நாங்கள் ஐந்துபேர் தனியாக ஒரு வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்। அதில் இரண்டுபேர் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள். மற்ற மூன்று பேரும் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். அப்போது ஒன்றாக சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த சைவம் சாப்பிடும் நண்பன் அவனருகிலிருந்த அசைவ பாத்திரத்தை என்னை நகர்த்தி வைக்க சொன்னான். அதன் பொருள் புரியக்கூடியதே. நான் கையை நீட்டி நகர்த்தி வைத்துக்கொண்டே மெதுவாகக்கேட்டேன்.

நீ ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை?

நாங்களெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமில்லை?

அதான் ஏன்னு கேட்கிறேன். ஏன் உயிரைக் கொல்ல விருப்பம் இல்லையா?

ஆம். அதுவும் ஒரு காரணம்.

ஒரு மாட்டை அடித்து குறைந்தது நான்கு பேர் சாப்பிடலாம். அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர். பல ஆயிரம் உயிர்களின் உயிரைக்கொன்று உன் ஒரு வேளை சாப்பாட்டை உட்கொள்கிறாய்.

நெல் பயிராய் வளர்ந்தால்தான் அது உயிர். வெறும் நெல் உயிரல்ல.

உயிரில்லாத பொருளிலிருந்து உயிர் தோன்றுவதில்லை. ஒவ்வோர் உயிரின் உணவும் ஓர் உயிர்தான். உயிரில்லாத பொருட்களை உணவாக உட்கொள்ளும் உயிர்கள் உலகில் இல்லை.

எனக்கு அதன் சுவை பிடிப்பதில்லை.

சுவைத்துப் பார்த்திருக்கிறாயா?

இல்லை. எனக்கு அதன் மணம் பிடிப்பதில்லை. அதனால் அது சுவையாக இருக்குமென்று தோன்றவில்லை.

நல்ல மணமாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடுவாயா?

இந்த பேச்சை விடு. எனக்கு அசைவம் சாப்பிடுவதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருகிறது.

எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும் எங்கள் மனத்தை புண்படுத்தும் என்று உனக்குத்தோன்றவில்லையா? அது அருவருப்பானது என்று உனக்கு யாரும் சொல்லவில்லையா?

Tuesday 11 December 2007

ஏனெனக்கு மயக்கம். ஏனெனக்கு நடுக்கம்.


இந்த பாடலை கேட்கும்போதும் பார்க்கும்போதும் என்னென்னவோ செய்கிறது கரீனா. பூவே எனக்கும் சக்டா காடி பயணமும், வடா பாவும் பிடித்துதான் இருக்கிறது. கங்காஜல் போலீஸ்கார திவாரியை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. குட்மார்னிங் மடல் மட்டும் போதுமென்று நினைக்கிறேன். காலம் கடந்துவிட்டது.

Saturday 17 November 2007

பக்தி பாடலுக்கு பிரபுதேவாவின் நடனம்

பக்தி பாடலுக்கு பிரபுதேவாவின் நடனம்

Sunday 11 November 2007

சுல்தான் தி வேரியர்.






சுல்தான் தி வேரியர்। ரஜினியின் மகள் சௌந்தர்யா, ரஜினியை மையமாக வைத்து எடுத்திருக்கும் அனிமேஷன் படத்தின் ட்ரைய்லர்.

Monday 29 October 2007

மீண்டும் ஷகீரா

மீண்டும் ஷகீரா.

இந்த முறை இலண்டனிலிருந்து இந்த இடுகையை எழுதுகிறேன். இப்போது இலண்டனில் புது வேலை கிடைத்து வந்திருக்கிறேன். இதைச்சொல்ல தனி இடுகை தேவையா என்றுதான் தோன்றுகிறது. வேறென்ன செய்ய? இரண்டரை நாள் வார இறுதி. பொழுதே போக மாட்டேனென்கிறது. வெளியில் போகலாமென்றால் மழை பெய்கிறது.

பொழுதுபோகாமல் பெயரிலியின் பரந்த அபத்தியல்வாதமெல்லாம் படித்தேனென்றால் பாருங்கள். அப்படியும் முழுதாக படிக்க முடியவில்லையென்பது வேறு விசயம்.

Tuesday 2 October 2007

தூண்டப்பட்ட திரிவிளக்கு

ஓசை செல்லாவும் சுப்பையா வாத்தியாரும் ஏதோ கடவுளைப்பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் இந்த இடுகையை படித்ததனால் எனக்கு அப்படித் தோன்றுகிறது. மிகவும் குறைவான வேகம் உள்ள இணைய இணைப்பு என்பதனால் இது சம்மந்தமான அனைத்து இடுகைகளையும் படித்துப் புரிந்து கொள்ள நேரமில்லை மன்னிக்கவும்.

நான் இணைய இணைப்பு இணைப்பு இல்லாத இந்நேரத்தில் கொஞ்சம் நேரமே கிடைத்திருப்பதாலும் கிடைத்த நேரத்தை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலும் அவசர அவசரமாக எழுத ஆரம்பிக்கிறேன். எனவே என்னால் எந்த பதிவுகளிலிருந்தும் மேற்கோள் காட்ட முடியாது மேலும் இது அந்த ஓர் இடுகையைப் படித்ததனால் தூண்டிவிடப்பட்ட என் சிந்தனை அவ்வளவுதான்.
எனக்கு விடை தெரியாத சில கேள்விகள் ரொம்ப நாட்களாகவே உண்டு. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாமென்றிருக்கிறேன்.

முதல் கேள்வி
எனக்கு என்ன நிறமெல்லாம் என்ன நிறமாக தெரிகிறதோ அது எல்லோருக்கும் அதே நிறமாகத்தான் தெரிகிறதா? புரியவில்லையா? இருங்கள் கொஞ்சம் தெளிவாகக் குழப்புகிறேன்.
இப்போதைக்கு இரண்டு நிறத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். நான் பிறந்ததிலிருந்து ஒரு நிறத்தை சிவப்பு என்றும் இன்னொரு நிறத்தை பச்சை என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
(கொஞ்சம் நிறுத்திப் படிக்கவும்) இன்னொருவருக்கு அவர் பிறந்ததிலிருந்து நான் சிவப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம் பச்சை நிறமாகத் தெரிகிறது. ஆனால் அவருக்கு அது சிவப்பு நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
என்னுடைய பச்சை நிறமெல்லாம் அவர் கண்களுக்கு சிவப்பாகத் தோன்றுகிறது. அது அவருக்கு பச்சை நிறம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது எனக்கு சிவப்பு நிறமாகவும் அவருக்கு பச்சை நிறமாகவும் தோன்றுவதெல்லாம் இருவரின் வார்த்தைகளிலும் சிவப்புதான். ஆனால் இருவரின் பார்வைகளிலும் வேறு வேறு. இதையே எல்லா மனிதர்களுக்கும் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் தெரிகிறது. ஆனால் பெயர்கள் மட்டும் ஒன்று. இப்படியிருந்தால் எப்படி இருக்கும்? இது என் கற்பனைதான்.இது பொய்யாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது. இதை பொய்யென்று எப்படி நிரூபிப்பது?

சரி இருக்கட்டும் இப்போது இரண்டாவது கேள்வி
நேற்றைய ஒரு மில்லிமீட்டரும் இன்றைய ஒரு மில்லிமீட்டரும் உண்மையில் ஒரு மில்லிமீட்டர்தானா?
சரி சரி திரும்பவும் பழையபடி தெளிவாகக் குழப்புகிறேன்.
நேற்று ஒரு பொருள் அளக்கப்படுகிறது. அப்போது அது ஒரு மில்லி மீட்டர் இருக்கிறது. அதன்பின்பு எல்லாப்பொருட்களும்(உயிருள்ளவை உயிரற்றவை அனைத்தும்) மெதுவாகவும் சீராகவும் வளர்கின்றன. அடுத்த நாள் எல்லாப் பொருட்களும் கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அளக்கப்பட்ட பொருள் நேற்றைவிட பெரியதாக இருக்கிறது.

எல்லாப்பொருட்களும் வளர்ந்திருப்பதால் நேற்று அளக்கப் பயன்படுத்திய அளவுகோலும் வளர்ந்திருக்கும். எல்லாமும் சீராக வளர்ந்திருப்பதால் அளவுகோல் இப்போதும் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டும். ஆனால் இன்றைய ஒரு மில்லிமீட்டர் நேற்றைய ஒரு மில்லிமீட்டரைவிடப் பெரியது. அப்படி தினமும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒரு மில்லி மீட்டர் என்பது ஒரே நீளத்தில் எப்போதும் இருப்பதில்லை. ஆனால் நாம் அளந்தால் எப்போதும் நமது அளவுகோல் ஒரு மில்லிமீட்டர்தான் காட்டுகிறது.

இது உண்மையா? பொய்யா? இதை உண்மையென்றோ பொய்யென்றோ எப்படி நிரூப்பிப்பது? இதுவரை இது உண்மையென்று நிரூபிக்கப்படாததால் இது பொய்யென்று சொல்ல முடியுமா?

மூன்றாவது கேள்வி
இந்த கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். பலதடவை பலரால் கேட்கப்பட்டக் கேள்விதான்.

காலம் எப்போது ஆரம்பித்தது? ஆரம்பிக்கும் முன்னால் எதாவது காலம் இருந்திருக்குமே. அப்படியிருந்திருந்தால் காலம் என்பது தொடங்கியிருக்கவே வாய்ப்பில்லையல்லவா? அதேபடி காலம் முடியவும் வாய்ப்பில்லை. சரி ஏதொவொன்று இருக்கிறதென்றால் அது கண்டிப்பாகத் தொடங்கிதானே இருக்கவேண்டும்? தொடங்காமலே எப்படி ஒன்று இருக்கமுடியும்?


இது சம்மந்தமான ஒரு கிளைக்கேள்வி.
உலகில் அசைகின்ற அனைத்தும் அனைத்து அசைவுகளையும் நிறுத்திவிடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதாவது மூளையும் தனது செயல்பாட்டை நிறுத்திவைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஐந்துநாட்கள் இப்படி நிற்கின்றன. பிறகு மறுபடியும் இயங்க ஆரம்பிக்கின்றன.
இப்போது உலகில் எல்லாக்கடிகாரங்களும் நின்ற நொடியிலிருந்து இயங்க ஆரம்பிக்கின்றன. உலகின் எல்லா மூளைகளும் விட்ட இடத்திலிருந்து சிந்திக்க ஆரம்பிக்கின்றன.

அப்படியானால் கடிகாரங்களின்படியும் உயிரினங்களின் உணர்வுகளின்படியும் நின்றுபோன அந்த ஐந்து நாட்கள் கணக்கில் வரவே வராது.
இப்படி ஒன்று உண்மையில் நிகழ்ந்திருக்குமானால் அதை எப்படி நிரூபிப்பது?

இதுவரை எப்படி நிரூபிப்பது எப்படி நிரூபிப்பது என்று நிறைய முறைக் கேட்டுவிட்டேன். இப்போது நேரடியாக நான் சொல்ல வருவதை சொல்கிறேன்.

அதாவது
நாம் புரிந்துகொள்வது எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறோம்.
நாம் அளக்கும் எதையும் எதாவது ஒன்றுடன் ஒப்பிட்டே அளக்கிறோம்.
தெளிவாக சொல்வதானால் பகுத்தறிவென்பது ஒப்பிட்டு அறிவது நாம் கண்டுபிடிக்கிறது எதையும் உண்மையில் கண்டுபிடிப்பதில்லை. வெறும் பெயர் மாத்திரமே வைக்கிறோம்.
நாம் ஒப்பிட்டு அறிந்துகொள்ளுவதற்கு பயன்படுத்தியவற்றையெல்லாம் வரிசைப்படுத்திக்கொண்டே போனால் ஒப்பிடாத முதற்பொருள் ஒன்று எல்லா அளவைக்கும் இருக்குமல்லவா? அதாவது நம்முடைய அறிந்துகொள்ளும் அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இயங்குகிறது. ஆனால் அதற்கும் மேலே அறிந்துகொள்ள முடியாத எதோ ஒன்று அல்லது பல இருக்கின்றன.
அதாவது ஏதோ ஒன்று அல்லது பல எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது அல்லது தானே இயங்க விடுகிறது. அதை கடவுள் என்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். ஏனென்றால் நாம் பெயர் மட்டுமே வைக்கிறோம்.
ஒருமுறை நண்பர்களுக்குள் பேய் பிசாசைப்பற்றி ஒரு விவாதம் நடந்தது. என்னிடம் ஒருவன் கேட்டான். "பேயை நம்புகிறாயா?". நான் சொன்னேன் "கடவுள் என்று இருப்பதாலேயே பேயென்று ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே பேயென்று ஒன்று இருந்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்."
எல்லோரும் என்னை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. மீதி ஒயினைக் குடிக்க ஆரம்பித்தேன்.
சரி என்ன சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா? நான் எப்போதோ சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன் அல்லது சொல்லிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன். யாராவது பின்னூட்டத்தில் உதவுங்கள்.


Saturday 22 September 2007

இங்கிலாந்து 600028

நேற்று மின்னஞ்சலில் வந்த ஒரு துணுக்கு.

Monday 17 September 2007

எனது ஒளிப்படப்பெட்டியில்-2

நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



















Saturday 15 September 2007

எனது ஒளிப்படப்பெட்டியில்-1

காரைக்குடி தெருவைப் போல இருக்கிறதே. இப்படித்தான் பூம்புகாரின் தெருக்கள் இருந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டே இந்த படத்தை எடுத்தேன். பக்கத்தில்தான் பாராளுமன்றம் இருப்பது அப்போது எனக்குத் தெரியாது. இது நான் எடுத்தவற்றிலேயே அடிக்கடி திறந்து பார்த்து ரசித்துக்கொள்ளும் படங்களில் ஒன்று.









Monday 10 September 2007

சில சாமியாடிகளும் நாங்களும்

நான் அன்று காலை வழக்கமாக நண்பர்களுடன் டாப்படிக்கும்(டாப்படிப்பதின் அருஞ்சொற்பொருள்: இளைஞர்கள் ஏதாவது டீக்கடையின் முன் இரண்டு மூன்று பைக்குகளை குறுக்குமறுக்காக நிறுத்தி இரண்டு சிகரெட்டுகளை வாங்கி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ரவுண்டில் விடும் இடம்) இடத்துக்கு வந்தேன். நண்பர்கள் எல்லோரும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.
"கைல எவ்வளவு வச்சிருக்க"
" இருவது ரூபா இருக்கும் "
" சரி கிளம்பு போகலாம்."
" எங்கடா?"
" அதெல்லாம் அப்புறம் சொல்றோம் கிளம்பு மொதல்ல"
"இரு அவய்ங்கல்லாம் வந்துரட்டும்" என்றான் இன்னொருவன்
யாரு அவய்ங்க என்று முழித்தபடி நின்றிருந்தேன்.
கல்லூரியில்(சரி பாலிடெக்னிக்) என் வகுப்புத்தோழர்கள் இருவர் வந்தனர். அவர்களுடன் எங்களைவிட வயதில் மூத்த இன்னொரு நண்பரும் வந்திருந்தார். அவர்கள் வந்தவுடன் கிளம்பினோம். பஸ்ஸ்டாப் வந்தபிறகு திரும்பவும் கேட்டேன்.
"எங்கடா போறோம்? "
"உத்தரகோசமங்கைக்கு "
"எதுக்கு? "
"சாமி கும்பிட. "
என்னங்கடா இப்பிடி ஆரம்பிச்சுட்டிங்க என்று நினைத்தபடி நின்றிருந்தேன்.

பஸ் உத்தரகோசமங்கையை நெருங்கும்போது ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்க சொன்னார்கள். "என்னடா கோயிலுக்குப்போறேன்னு சொன்னீங்க?" என்று கேட்டேன். "இது வேற கோயிலு. வந்து பாரு தெரியும்" என்றார்கள். வயக்காடுகளின் வழியாக மொட்டை வெயிலில் நடந்து சென்றோம். வயல்கள் சூழ்ந்த இடத்தில் இரண்டு மூன்று மரங்கள் சுற்றிலும் நின்று நிழல் தந்து கொண்டிருந்த இடத்துக்கு கூட்டிச்சென்றார்கள். அங்கே ஒரு கண்ணங்கரேலென்று ஒரு கல் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எண்ணையெல்லாம் ஊற்றி பூ பொட்டெல்லாம் வைத்து பூசை நடந்திருந்ததற்கான அறிகுறி தெரிந்தது. அங்கு போனவுடன் என் கல்லூரி நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து "அன்னைக்கு வச்ச பூ இன்னும் வாடாம இருக்கு பாரு" என்றார்கள். எனக்கு வாடியமாதிரிதான் தெரிந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. போனவுடன் சட்டையெல்லாம் கழட்டச்சொன்னார்கள். நான் பெரும்பாலும் பொது இடங்களில் சட்டையை கழற்றுவதில்லை. என் உடம்புவாகு அப்படி. கொஞ்சம் ஹார்மோன் கோளாறு. சரி எல்லாப்பேரும் கழட்றாய்ங்களேனு கழற்றினேன். அந்த கல்லு கருப்பணசாமியாம். அதன் இரண்டு புறமும் வரிசையாக உட்கார்ந்துகொண்டு பஜனை பாட ஆரம்பித்தார்கள்.

என் நண்பன் ஒருவன் வருடம் தவறாமல் விரதம் இருந்து ஐயப்ப மலைக்கும் பழனிமலைக்கும் மாலை போடுபவன். அவனும் பஜனையில் பாடினான். ஒரு அருமையான பாட்டு. இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது.
எனத்தொடங்கும் பாடல். சரியான அடிப்பாட்டு(ரிதமிக்). ரொம்ப அருமையாக இருந்தது. கைதட்டிக்கொண்டே பாடினார்கள். எனக்கு பாடத்தெரியாததால் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். கைய மட்டுமாவது தட்டுடா என்றபிறகு கைகளை மெதுவாகத்தட்டிகொண்டிருந்தேன். திடீரென்று என் கல்லூரித்தோழன் ஒருவன் சாமிவந்ததுபோல ஆடத்தொடங்கினான். (பாவம் இப்போது அவன் உயிருடன் இல்லை. கொடைக்கானல் போகும்போது விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முப்பது நாட்கள் கோமாவில் இருந்து பின் உயிரைவிட்டான். இவன் தான்
போன இடுகையில் நான் குறிப்பிட்ட தியானம் பற்றி சொன்னவன்). பின் அந்த மூத்த நண்பர் அவனைப் பார்த்து யார் வந்திருக்கறது என்று கேட்டார். ஒன்றும் பேசவில்லை. மூர்க்கமாக ஆடிக்கொண்டிருந்தான். அவர் இரண்டு மூன்று முறை அதட்டிக்கேட்டுவிட்டு வந்திருக்கிறது கருப்பசாமி என்றார். பின்னர் இன்னொரு வகுப்புத்தோழனும் ஆடத்தொடங்கினான். அவனுக்கு வந்திருக்கிறது ஆஞ்சநேயராம். இரண்டு பேரும் ஆடிக்கொண்டிருந்தாலும் பஜனையைத்தொடருமாறு சைகை செய்தார்கள். நானும் என் நண்பர்களும் பயந்தபடி பஜனையைத் தொடர்ந்தோம். என் கடவுள் நம்பிக்கையே வேறு. கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. சாமியாடியவர்கள் மேல் நடிக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இல்லை. பின் என்னதான் அது. அது பற்றிய என் அனுமானத்தை கடைசியில் சொல்கிறேன். இப்போதைக்கு சம்பவத்துக்கு செல்வோம்.

பின் அந்த மூத்த நண்பருக்கும் சாமி வந்தது. அவருக்கு வந்திருப்பதும் ஆஞ்சநேயராம். என்னங்கடா இது டபுள் ஆக்டா என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் அவர்களே சொன்னார்கள். முன்னால் வந்தது பால ஆஞ்சநேயராம் இப்போது வந்திருப்பது வீர ஆஞ்சநேயராம். ஏதோ சொல்லுங்கடா என்றபடி உட்கார்ந்திருந்தேன். மூன்று பேரும் ஆக்ரோசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வசமாக நடுக்காட்டில் மாட்டிக்கொண்டோம். எனக்கெல்லாம் பயம். இவிய்ங்க பாட்டுக்கு எதாவது கல்ல கில்லத் தூக்கி தலையில போட்டுட்டு சாமி கொன்னுருச்சிட்டாய்ங்கன்னா. சரி ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதி காத்தோம். அதுலயும் அந்த பாலஆஞ்சநேயர் அநியாயத்துக்கு முகத்தை குரங்கு மாதிரிக் காட்டிக்கொண்டு ரொம்ப சேட்டை பண்ணிக்கொண்டிருந்தான். பாலாஆஞ்சநேயர் ரொம்ப சேட்டைக்காரராமே. எனக்கு சிரிப்பு வந்தது. சிரிக்கவில்லை. பின்ன உயிர்பிரச்சினை இல்லையா?

பிறகு குறி சொல்ல ஆரம்பிச்சாய்ங்க. ஒவ்வொருத்தனயா கூப்பிட்டு கடந்த காலமெல்லாம் சொல்லி இனிமேல் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கக்கூறுகளையெல்லாம் சொன்னாய்ங்க. சைட் அடிக்கக்கூடாதாம். கறி மீன் சாப்பிடக்கூடாதாம். சரி ஓக்கே. எல்லாரையும் கூப்பிட்டு அவரவர் காதல் சங்கதிகளையே பேசினார்கள். என் முறைவந்தபோது என்னைப் பார்த்து ஹே இவனெல்லாம் லவ் பண்றான்டா என்றது கருப்பசாமி. அதென்ன இவனுக்கெல்லாம். நான் கொஞ்சம் அமைதியான நல்ல பையன் என்று பெயர் எடுத்தவன். ஆனாலும் சமீபகாலமாக மரபணு அதாங்க ஜீன்ஸ் பேண்ட் காட்டன் சட்டையெல்லாம் போட ஆரம்பித்து கொஞ்சம் ஸ்டைலெல்லாம் பண்ண ஆரம்பித்திருந்தேன். அதிலும் அந்த குணால் கட்டிங், மஸ்ரூம் கட்டிங், குவாலியர் கட்டிங் என்று பலவாறாக அழைக்கப்பட்ட சிகையலங்காரம் வைத்திருந்தேன். அதனால் நானும் காதல் வலையில் விழுந்திருப்பேன் என்று சாமி நினத்துவிட்டது. சாமிக்குத் தெரியாது இதுவரை பதினோரு பெண்களை ஒருதலையாக காதலித்து இப்போது பன்னிரண்டாவது பெண்ணையும் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்திருக்கிறேன் என்று. எல்லோருடைய காதலி பேரையெல்லாம் சரியாக சொன்ன சாமி என்முறை வந்தபோது பெயரை என்னிடம் கேட்டது. பாவம் அந்த நண்பனுக்கு அந்த பெண்ணின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா? என் நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாது. நான் சொன்னேன் பின் சாமி என்னை ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று சாமிகளும் இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாக மலையேறாமல் வளைச்சு வளைச்சு ஆடிக்கொண்டிருந்தன. எல்லாம் ஓய்ந்தபிறகு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்வந்து இறங்கியபிறகு எல்லாவன்களும் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்னுட்டு போய்ட்டாய்ங்க. நானும் மலை ஏறிய சாமிகளும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். அதில் ஒருவன் மூக்கை இழுத்தபடி வாசனை வருதானு கேட்டான். நானும் அப்பாவியாக ஆமா எதோ வீட்டுல தோசை சுடுறாய்ங்க என்றேன். அட அதில்லைப்பா நாம் ஏத்தி வச்ச ஊதுபத்தி வாசனை வருதுல்ல என்றான். அந்த இடம் இருக்கும் இருபது கிலோமீட்டருக்கு அந்த பக்கம். இன்னொருவன் ஆமா வருது என்றான். எனக்கு ஒண்ணுக்குதான் வந்தது. சத்தம் போடாமல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அதன்பிறகு எல்லோரும் வந்தார்கள். பிறகு கூடிபேசி சில முக்கிய முடிவுகளை எடுத்தார்கள். இனிமே எல்லோரும் முகூரணி பக்கத்திலிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பஜனைக்கு வந்துடனும். இனிமே இளம்பெண்களை சைட் அடிக்கக்கூடாது. கறி, மீன் சாப்பிடக்கூடாது. இதென்னடா வம்பாருக்கு. வசமா மாட்டிக்கிட்டோம் போலருக்கே. பேசாம காலையில இன்னும் கொஞ்சநேரம் தூங்கியிருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என்னளவில் ஆஞ்சநேயர் முதற்கொண்டு இன்னபிற தெய்வங்கள் எதுவுமில்லை. ஆனா எதோ ஒண்ணு இருக்கு. அவ்வளவுதான். இவிய்ங்களுக்கு வந்தது சாமியில்லை. ஆனால் பயம் காரணமாக அவிய்ங்க சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று.

அடுத்த நாள் வழக்கம் போல டாப்புக்கு வந்தேன். எல்லாம் சுரத்தே இல்லாம இருந்தார்கள். நான் தான் ஆரம்பித்தேன்.
"என்னடா இப்பிடி சொல்றாய்ங்க."
"எவ்வளவு நாளைக்குடா இப்பிடி? "
"இனிமே வாழ்க்கைபூரா இப்படித்தான்"
"நம்ம லவ் பண்றதெல்லாம்? "
"மறந்துற வேண்டியதுதான். "
"சைட் அடிக்கக்கூடாதாம்ல. "
"அதான் சொன்னாய்ங்கல்ல. "
தயங்கி தயங்கி கேட்டேன். "அப்ப கை? "
"இவன் யார்றா இவன். சைட்டே அடிக்கக்கூடாதுன்றாய்ங்க. நீ கையின்ற. "
"என்னங்கடா நீங்கல்லாம் ரேகை அழிஞ்சு போய் நிக்கிறீங்க. நானல்லாம் இப்பத்தான்டா ஆரம்பிச்சுருக்கேன்." (அப்போது எதோ ஐம்பது சொச்சத்தில் இருந்தது. இருநூற்று சொச்சம் வரை கணக்கு வைத்திருந்தேன். பிறகு விட்டுவிட்டேன்(எண்ணுவதை)).
"அதுக்கென்ன பண்றது. விடுறதுன்னா எல்லாத்தையும்தான் விடனும்".

பிறகு இன்னும் இரண்டு நாட்கள் ஒழுங்காக பஜனைக்குப் போனோம். அப்போதுதான் அந்த மக்கள் பங்குபெற்ற புரட்சி நடந்தது. நண்பர்களில் ஒருவன் மெதுவாக ஆரம்பித்தான். எனக்கென்னவோ இவிய்ங்க நடிக்கிறாய்ங்கன்னு தோணுது என்றான். நான் தொடர்ந்தேன். எனக்கு அப்பவே தோணுச்சு. ஆனா இவிய்ங்க நடிக்கிறாய்ங்கன்னெல்லாம் நான் நினைக்கல. இவிய்ங்களுக்கு வந்திருக்கிறது செல்ஃப் ஹிப்னாடிசமா இருக்குமோன்னு நினைக்கிறேன். நண்பர்கள் யாரும் இதை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்கள் ஒரே முடிவாக இது நடிப்பு என்ற நினைப்புக்கு வந்து விட்டார்கள். பிறகு யாரும் பஜனைக்கு போகவில்லை.

பின்னர் மார்கழி மாதம் வந்தது. அந்த மாலை நண்பன் போடுகிற வழக்கம்போல மாலை போட்டான். இன்னும் சில நண்பர்களும் கன்னிச்சாமியாக மாலை போட்டார்கள். நான் வழக்கம் போல போடவில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை. மேலும் என் அப்பாவுக்கும் தெய்வ நம்பிக்கை இருந்தாலும் இதெல்லாம் விரும்ப மாட்டார். மாலை போடாமல் விரதம் இருந்து அவர் அலுவலக நண்பர்களுடன் ஒருமுறை காரில் ஐயப்ப மலைக்கு போய்வந்தார். நண்பர்களுடன் இன்னும் சில இளம் சாமிகளும் (எல்லாம் எங்கள் கிரிக்கெட் டீமில் விளையாடுபவர்கள்தான்) சேர்ந்து கொண்டார்கள். சரி பஜனை பாடுவதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். இதனால் டாப் இடம் மாறியது. ஆனால் இந்த டாப்பில் சாமிகளெல்லாம் ரொம்ப ஒழுக்கம். அந்த வீட்டிற்குள் யாரும் தம்மடிக்கக்கூடாது. நானும் இன்னும் இரண்டு நண்பர்கள் மட்டுமே மாலை போடாதவர்கள். அவர்கள் இரண்டு பேரும் தம் அடிக்காதவர்கள்(அப்போது). எனவே நான் கீழிறங்கிப்போய் துணையில்லாமல் தம்மடிக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் காதலுக்கு மரியாதை படம் வெளியானது. படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. சாமிகளால் பார்க்க நினைத்தாலும் பார்க்க முடியவில்லை. சாமிகள் போகாததால் நானும் பார்க்கவில்லை. என்னை விட மாலை போட்ட அனைவரும் சினிமா பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். அவர்களால் தாங்க முடியவில்லை போலும் நான் இல்லாதபோது போய்விட்டு வந்துவிட்டார்கள். அதன்பிறகு சாமிகளின் ஒழுக்கம் ஆட்டம் கண்டது. ஒவ்வொருவராய் யாருக்கும் தெரியாமல் போய் தம்மடித்துவிட்டு வந்தார்கள். பின்னர் அதுவும் நிலைக்கவில்லை. வீட்டுக்கு வெளியில் பால்கனியில் அடிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் வீட்டுக்குள் அடிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் காவி வேட்டியைத்தவிர வேறு வேறுபாடு எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் பஜனை மட்டும் நிற்கவில்லை.

ஒருநாள் மாலையில் நான் அந்த புதிய டாப்புக்கு வந்து பார்த்தால் அந்த பழைய சாமியாடிகள் வந்து உட்கார்ந்திருந்தார்கள். இதென்னடா புதுசிக்கல் என்று நினைத்துக்கொண்டே நழுவப்பார்த்தேன். முடியவில்லை. அந்த சாமியாடிகள் மூன்று பேரும் தங்கள் பஜனைக்கு வராததைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் வழக்கம் போல எல்லா பஜனையிலும் ஒருவர் மாற்றி ஒருவர் சாமியாட ஆரம்பித்தார்கள். அதிலும் அந்த அங்கே இடிமுழங்குது பாட்டை பாடினால் எதாவது ஒரு சாமி வந்துவிடும். ஆனால் எப்போதும் அந்த ஆஞ்சநேயரும் கருப்பசாமியுமே வந்தார்கள். இந்தமுறை டபுள் ஆக்டெல்லாம் போடவில்லை. ஒரே ஆக்ட்தான். நண்பர்கள் அனைவரும் அவர்கள் போனபின்னர் சொல்லிச்சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் வழக்கம் போல தன்னிச்சையாக இது நடிப்பில்லை. செல்ஃப் ஹிப்னாடிசம் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன்.

பின் நண்பனின் வீட்டில் எதோ பூஜை பண்ணுவாய்ங்கல்ல அது பண்ணாய்ங்க. அந்த பூஜைக்கு குருசாமி வந்திருந்தார். அவருக்கும் அடிக்கடி சாமி வருமாம். ஆனால் அது ஒரிஜினல் சாமியாம். அவருக்கு சாமிவந்தால் நடந்தது நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லுவாராம். நான் வழக்கம் போல இதுவும் செல்ஃப் ஹிப்னாடிசம் என்று நினைத்துக்கொண்டேன். வெளியில் சொல்லவில்லை. பின்ன எல்லோரும் ஒன்று சொல்லும்போது நான் மனதிற்குள்தான் நினைத்துக்கொள்ள முடியும். வெளியில் சொல்லமுடியுமா என்ன? அந்த பூஜைக்கு மூன்று சாமியாடிகளில் ஒருவன் வந்திருந்தான். அதுதான் அந்த பால ஆஞ்சநேயர். இங்கேயும் வந்து இரண்டுமணிநேரம் சாமியாடினானாம். நான் அந்த பூஜைக்குப் போகவில்லை. நண்பர்கள் சொன்னார்கள். பிறகு அந்த குருசாமி ஓங்கி அறைந்து சீ போ! என்றாராம். பின்னர் நாடி நரம்பெல்லாம் அடங்கி பேயறைந்ததுபோல நின்றானாம். நண்பர்கள் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற ரீதியில் பேசிக்கொண்டார்கள். நான் இப்போதும் அவன் நடிக்கவில்லை என்று மனதிற்குள் நினத்துக்கொண்டேன். சரி அந்த கதை அத்தோடு முடிந்தது. அதன்பிறகு இப்போதும் நண்பர்கள் நாங்கள் இதைப்பற்றி பேசஆரம்பித்தால் வேடிக்கை நிகழ்ச்சியாகத்தான் பேசிக்கொள்வோம்.

என்னைப்பொறுத்தவரை அந்த மூன்று பேருக்கும் வந்தது செல்ஃப்ஹிப்னாடிசமோ என்னவோ. உளவியல் வல்லுநர்கள்தான் சரியான பதிலை சொல்ல முடியும். ஆரவாரமாக பஜனை செய்வதால் ஏற்படும் சத்தத்தால் கிளர்ந்தெழும் ஆழ்மனது அவர்களை ஒருவித மயக்கத்துக்கு கொண்டு செல்கிறது. அப்போது அவர்கள் அந்த நிலையில் தங்களுக்கு இன்ன சாமிவந்திருக்கிறது என்று நினத்துக்கொள்கிறார்கள். அதனால் அந்த சாமியைப் போலவே அதாவது அந்த தெய்வங்களைப்பற்றி நமக்கு சொல்லப்பட்ட கதைகளில் வருவதுபோல நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மயக்கநிலையில் அவர்களுக்கு ஓர் அதீத பலம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அவர்கள் சராசரி மனிதர்கள் செய்ய இயலாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். அம்மயக்கநிலையில் தங்கள் ஆழ்மனதில் சரியானது என்று பதிந்துவிட்ட விசயங்களை வெளியில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இங்கே ஒன்றைக் கவனிக்கவும். நம் ஆழ்மனது எப்போதும் சரியான விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வெளிமனது அதை ஏற்றுக்கொள்வதில்லை. வெளிமனது வெற்றியின் பெருமிதத்தையே விரும்புகிறது. அது விவாதங்களில் தோற்பதை விரும்புவதில்லை. எனவே புதுப்புது சமாதானங்களை சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப்படுத்திக்கொள்கிறது. இப்போது வலைப்பதிவுலகில் நடக்கும் விவாதங்களையெல்லாம் சேர்த்து நடக்கும் விவாதங்களில்லாம் சரியான வாதங்கள் வைக்கப்படும்போது ஆழ்மனது அதை ஏற்றுக்கொள்கிறது. வெளிமனது தோல்வியை விரும்பாமல் தொடர்ந்து வாதம் செய்துகொண்டேயிருக்கிறது. எதோ ஒரு பதிவில் படித்தேன். விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்கிறார்களே தவிர முடிவொன்றும் ஏற்படுவதில்லையென்று. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது வெளிமனதை பொறுத்த விசயம். ஆழ்மனது சரியானதை ஏற்றுக்கொள்கிறது. சரி மீண்டும் விசயத்திற்கு வருகிறேன். இந்த மாதிரி சாமி வரும் சமயங்களில் சில சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது. இது எப்படி என்றுதான் தெரியவில்லை. அவர்கள் சொல்வது குத்துமதிப்பாக நடக்கிறது என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உளவியலின் ஓர் அதிசயம். இப்போது நாம் கொண்டிருக்கும் அறிவின் மூலம் சிந்தித்துப் பார்த்தால் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் என்னுடைய ஐயம் என்னவென்றால் அப்படி ஏன் எதிர்காலத்தை கணிக்க முடியாமல் இருக்கவேண்டும். முடியாதவை பலவற்றை இன்றைய அறிவியல் முடித்துக்காட்டியிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் ஏன் எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஓர் ஆற்றல் மனிதன் பெற முடியாது? முடியக்கூடும் அல்லவா? தன் பரிணாம வளர்ச்சிக்கான செய்தியை ஓர் உயிரினம் தனது சந்ததிகளின் வழியாக கடத்திக்கொண்டே செல்கிறது. எனவே உயிர்கள் அழிந்தாலும் அவற்றுக்கான ஒரு தங்களால் உணரமுடியாத ஒரு செய்தி பரிமாற்றம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தை அறியக்கூடிய ஆற்றலைப் பெறமுடியும் என்று எனக்குத்தோன்றுகிறது. இது முற்றிலும் எனது அனுமானம் மட்டுமே. இதற்கு என்னால் எந்தவொரு தரவும் தரவியலாது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். எனவே அந்த ஆழ்மனதை நான் கடவுள் என்று சொல்கிறேன். வெறுமனமே சொல்லமட்டுமே செய்கிறேன். இது உண்மையில்லை. அல்லது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதையே இந்துமதமும் புத்தமதமும் ஆன்மா என்று சொல்கிறது என்று நான் நம்புகிறேன். ஏ உயிரே நீயே அது என்று இந்து மதம் சொல்வது இதைத்தான் என்று நான் நினைக்கிறேன். மதம் பற்றிய என் பார்வைகள் வேறுவிதமானவை. அதை இன்னொரு இடுகையில் எழுதுகிறேன். இப்போதைக்கு முடியவில்லை. தூங்கப்போகிறேன்.

Thursday 30 August 2007

யாரிந்த ஷகீரா?

நண்பர் ஒருவர் தியானம் செய்வதுபற்றி ஒரு முறை சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது வேறு எந்த சிந்தனையையும் மனதில் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் எதாவது ஒரு விசயத்தில் மட்டும் கவனம் செலுத்து என்று சொன்னார். அது எந்த விசயமாயிருந்தாலும் பரவாயில்லையா? எனது (பன்னிரண்டாவது) காதலியைப்பற்றி நினத்துக்கொள்ளலாமா? என்று கேட்டேன். எது வேண்டுமானாலும் நினத்துக்கொள் என்றார். ஒரேமுறையில் வராது. அதற்கெல்லாம் தீட்சை வேண்டுமென்றார். அந்த விசயம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒரு முறை எங்கள் மின் தடை ஏற்பட்டபோது எல்லோரும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு வெளியே போய்விட்டார்கள். நான் மட்டும் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து நடுவீட்டில் வைத்து அதனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். மனதில் எந்த ஒரு சிந்தனையும் வரக்கூடாது என்று மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேன். கொஞ்ச நேரம் அப்படியே சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு தூக்கம் வரும்போலிருந்தது. பின்னர் கொஞ்சநேரம் கழித்து அடிமுதுகில் எதோ கூசுவதுபோலிருந்தது. பின்னர் அந்த கூச்சம் கொஞ்சமாக முதுகின் நடுக்கோட்டின் வழியாக ஏற ஆரம்பித்தது. பின்னர் கழுத்தெல்லாம் கூசியது. பின்னர் பின்னந்தலை வழியாக ஏறி நெற்றிக்கு வந்தது. பின் புருவங்கள் சேரும் இடத்தில் எதோ சுழலுவதுபோல கூசியது. கொஞ்ச நேரம் அப்படியே கூசிக்கொண்டிருந்தது. என் உடல் முழுவதும் உணர்ச்சியற்றது போல இருந்தது. கைகளும் தலையும் காற்றில் அலைவதுபோல் இருந்தன. கொஞ்ச நேரம் அப்படி இருந்திருக்கும். பின்னர் என்னை உதறிக்கொண்டு எழுந்தேன். அடுத்தநாள் கல்லூரியில் அந்த நண்பரிடம் அதுபற்றி சொன்னேன். அவரால் நம்பவே முடியவில்லை. இதற்குமுன் எப்போதாவது செய்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லையென்று சொன்னேன். இதுதான் தியானம். இது முதல்முறையில் யாருக்கும் வராது என்றார். அதற்கு பின்னர் நான் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். பின் எப்போதும் அந்த முயற்சியில் இறங்கவே இல்லை.
ரொம்ப நாளாக எனது கணினியில் ஷகிராவின் வீடியோ பாடல் ஒன்று வைத்திருந்தேன். Shakira - Dance Like This என்ற அந்த பாடல் எதோ விளையாட்டுபோட்டியின் ஆரம்பவிழாவிலோ நிறைவுவிழாவிலோ ஷகீரா மேடையில் பாடுவது. அந்த பாடலில் ஷகீராவை பார்ப்பதற்கு இலண்டனில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் எங்களுடன் தங்கிய கறுப்பின பெண்னைப்போல இருந்ததால் அந்த பாடலை ரொம்பநாள் வைத்திருந்தேன். இன்று இயர்போனில் அந்த பாட்டைக்கேட்டுக்கொண்டே வீடியோவைப்பார்த்துக்கொண்டிருந்தேன். காதை செவிடாக்கும் இசை. கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது உடம்பெல்லாம் கூசுகிறது. கண்ணை மூடினால் உடலெல்லாம் பறக்கிறது. புல்லரிக்கிறது. யார் சொன்னது இரைச்சலாக இருப்பதெல்லாம் இசையில்லையென்று. இப்போது கூட அந்த பாடலை கேட்டுக்கொண்டேதான் தட்டச்சிட்டுக்கொண்டிருக்கிறேன். காது செவிடானாலும் பரவாயில்லையென்று முழு வேல்யூமும் வைத்து விட்டேன். மேலே சொன்ன அந்த அனுபவம் திரும்ப வரும்போலிருக்கிறது. யாரிந்த ஷகீரா?

சத்தமாக பாடுகிறேன்

Shakira e Wyclef
Ladies up in here tonight
No fighting
We are the Refugees
No fighting
No fighting
Shakira, Shakira
Never really knew that she could dance like this
She make a man wanna speak Spanish
Como se llama? Si
Bonita? Si
Mi casa? Su casa?
Shakira, Shakira
Oh baby, when you talk like that
You make a woman go mad
So be wise and keep on reading the signs of my body
I’m on tonight, you know my hips don’t lie
I’m starting to feel it’s right
All the attraction, attention
Don’t you see baby, this is perfection
Hey girl, I can see your body moving
And it’s driving me crazy
And I didn't have the slightest idea
Until I saw you dancing
And when you walk up on the dance floor
Nobody could not ignore
The way you move your body
Just move
And everything's so unexpected
The way you are connected
So you can keep on shaking it
Never knew she could dance like this
She make a man wanna speak Spanish
Como se llama? Si
Bonita? Si
Mi casa? Su casa?
Shakira, Shakira
Oh baby, when you talk like that
You make a woman go mad
So be wise and keep on reading the signs of my body
I’m on tonight, you know my hips don’t lie
I’m starting to feel you boy
Come on let’s go, real slow
Don’t you see babe, asi es perfecto
They know I’m on tonight, my hips don’t lie
I’m starting to feel it’s right
All the attraction, attention
Don’t you see baby, this is perfection
Shakira, Shakira
Boy, I can see your body moving
Half-animal, half-man
I don’t, don’t really know what I’m doing
But you seem to have a plan
I will self-restrain
Have come to feel me, feel me
See I’m doing what I can, but I can’t so, you know
That’s too hard to explain
Baila en la calle de noche, baila en la calle de dia
Baila en la calle de noche, baila en la calle de dia
Never really knew that she could dance like this
She make a man wanna speak Spanish
Como se llama? Si

Sunday 26 August 2007

நான் எழுத நினைத்திருப்பவை

நான் இந்த வலைப்பதிவுலகில் ஒரு பதிவை ஆரம்பித்து ஒரு பதிவராக நுழைந்து எட்டு மாதங்களுக்கு மேலானபோதும் இன்னும் என்னை ஒரு பதிவராக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. நான் இன்னும் ஒரு வாசகனாகவே நீடிக்கிறேன். அவ்வாறு நீடிப்பதையே தற்போதைக்கு விரும்புகிறேன். ஆனாலும் எல்லா புதியவர்களைப்போல எனக்கும் பதிவெழுத ஆசை இருக்கிறது. இப்போதைக்கு நான் தயங்குவதற்கு எனக்கு இன்னும் சரியான மொழிநடை அமையப்பெறாததும், இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே காரணம். மேலும் எழுதுவதில் உள்ள சோம்பேறித்தனம் இன்னொரு காரணம் ஆகும். நான் இந்த வலைப்பதிவுகளை மேயத்தொடங்கியபிறகு நிறைய விசயங்களை எழுத நினைத்து எழுதாமல் இருந்திருக்கிறேன். சிலவற்றை ஆரம்பித்து பாதி எழுதி வைத்திருக்கிறேன். மீதியை முடித்து வெளியிட எண்ணம் இருக்கிறது. அதற்கு சிலகாலம் பிடிக்கலாம். இன்னும் சில விசயங்களை தலைப்பு மட்டும் யோசித்து வைத்திருக்கிறேன். அவற்றையும் என்றாவது ஒரு நாள் எழுதுவேன். அவை என்ன என்ன என்பதை சொல்வதற்காக இந்த இடுகையை எழுதுகிறேன்.

1. தன்னந்தனியே ஒரு பயணம்: பக்கத்திலிருக்கும் மதுரையில் சித்தப்பா வீட்டில் சில மாதங்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது என் அப்பா மதுரை வந்து என்னை விட்டுவிட்டுபோனார். பொற்றாமரைக் குளத்தருகே இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கையில் கொடுத்துவிட்டு கண்கலங்கியபடியே பாத்து இருந்துக்கப்பா என்று சொல்லி விட்டு கிளம்பினார். இப்படி 21வயதிலும்கூட இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கே தனியாக போய்வரத்தெரியாமல் இருந்த நான் லண்டனுக்கு தன்னந்தனியாக போய்வந்தேன். என்னளவில் இது ஒரு பெரிய விசயம். பொன்ஸைப்போல நானும் லண்டன் போன புதிதில் கருப்பர்களைப் பார்த்து பயந்தேன். இவ்வாறு எனது இலண்டன் பயண அனுபவங்களை எழுத நினத்திருக்கிறேன். விரைவில் எழுதுவேன். மேலே உள்ள வரிகளைப் படிக்கும்போது நான் மிகவும் அப்பாவி ஒன்றும் தெரியாதவன் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். அது முற்றிலும் உண்மையில்லை. நான் அதிக அளவில் கூச்ச சுபாவம் உள்ளவன். இருந்தபோதிலும் சராசரி இளைஞர்களைப் போன்று எல்லா நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களை உடையவன். எல்லா சேட்டைகளும் செய்தவன். அவை எல்லாம் நண்பர்களுடன் இருக்கும்போது மட்டுமே.

2. தலைப்பு இன்னும் யோசிக்கவில்லை. போன வாரத்துக்கு முந்தைய வாரம் பரபரப்பாக இருந்த பெயரிலி (எதிர்) மாலன் சர்ச்சையில் எனது புரிதலை பாதி எழுதிவைத்திருக்கிறேன். இது தேவையா என்ற கேள்வி எழக்கூடும். இந்த விசயத்தைப்பற்றி யோசித்துக்கொண்டே ஊருக்கு கிளம்பியபோது பயண நேரத்தில் எனக்குத்தோன்றிய கருத்துக்கள் சற்று நன்றாக இருப்பதாக எனக்கு தோன்றியதால் இதை எழுத ஆரம்பித்தேன். இது போன்ற விசயங்களில் கருத்து சொல்லக்கூடிய அளவு நான் முதிர்ச்சி அடையவில்லைதான். எனினும் இது ஒரு எழுதிப்பழகும் முயற்சி என்ற அளவில் எழுதி வைத்திருக்கிறேன்.

3. நான் ஏன் இந்து: இப்படி ஒரு தலைப்பை நினைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்கே பெரும் தயக்கமாக இருக்கிறது. அந்தளவிற்கு வலைப்பதிவுலகில் செல்வாக்கு பெற்றவர்கள் மத்தியில் இந்து மதத்தின் மீது வெறுப்பு நிலவுகிறது. எனக்கு நினவில் இருக்கிறபடி நான் ஏழாம் வகுப்பில் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடம் படிக்கிற வரை தெய்வ நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தேன். அந்த பரிணாம வளர்ச்சி பற்றிய பாடமே, நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படக்காரணமாக அமைந்தது. இது நேரடியாக இந்து மதத்தில் நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணம் இல்லையென்ற போதிலும் எதாவது ஒரு சாமியை கும்பிடுவதற்கான ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர் நான் படித்த விவேகானந்தரின் புத்தகங்கள் எனக்கு இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றை ஏற்படுத்தின. அவர் விளக்கியிருந்த அத்வைதம் என்ற தத்துவத்தின் மீது மிகுந்த மதிப்பு உண்டாகியது. எனக்கு இப்போது அந்த அத்வைத தத்துவங்களின் மீதும் விமர்சனம் உள்ளது. அதைப்பற்றியும் இந்த கட்டுரையில் எழுதலாமென்றிருக்கிறேன். மேலும் நான் சைவம் தமிழர்களின் மதம் என்றும் நம்புகிறேன். இந்து மதத்தின் தெய்வங்கள் எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்ற கற்பனையையும் எழுத இருக்கிறேன். சொக்கனும், முருகனும் பாண்டிய மன்னர்கள் என்று நான் நம்புகிறேன். முதலில் மன்னர் வழிபாடு என்பதில் ஆரம்பித்து பின்னர் அவர்கள் பெருந்தெய்வங்களாக ஆகியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். இது நான் படித்தவைகளை வைத்து எனக்குத்தோன்றுபவைகளேயன்றி இதற்கு என்னால் சரியான தரவுகளை தர இயலாது. நான் இப்போதும் கோவில்களுக்கு அதிகம் போவதில்லை. அதிகம் கடவுளைத்தொழுவதுமில்லை. அத்வைதமே ஒரு நாத்திக கோட்பாடு என்று நம்புகிறேன். எல்லாமும் எல்லோரும் கடவுள் எனும்போது கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லையென்றும் நம்புகிறேன். ஆத்மா அழிவற்றது என்ற கோட்பாடு எனக்கு சரியானதாகப் படவில்லை. இந்து மதத்தை நம்புகிறேன் என்று சொல்வதாலேயே நான் ஒரு வலதுசாரி என்றும் பார்ப்பனனென்றும் விமர்சனம் தோன்றக்கூடும். நான் பார்ப்பனனுமில்லை. வலதுசாரியுமில்லை. வலதுசாரிகளின்மீதும் எனக்கு நிறைய விமர்சங்களுண்டு. இதைப்பற்றி விரிவான இடுகையோ இடுகைத்தொடரோ எதிர்காலத்தில் எழுதும் எண்ணமிருக்கிறது.

4. என்னைக்கவர்ந்த பதிவர்கள்: இதில் அசைக்க முடியாத முதலிடத்தில் அய்யா இராம.கி அவர்கள் இருக்கிறார்கள். அவரைத்தொடர்ந்து குமரிமைந்தன், தமிழ் சசி, தருமி ஐயா, திரு, மாலன், பத்ரி, தங்கமணி, அபு முஹை, பெயரிலி, முகமூடி, நண்பன் ஷாஜி, மிதக்கும்வெளி சுகுணாதிவாகர், செல்வநாயகி மற்றும் பலர் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய இடுகை ஒன்றும் எழுத இருக்கிறேன்.

5. என் ஈழநிலைப்பாடு: இதே தலைப்பிலோ அல்லது வேறு எதாவது ஒரு தலைப்பிலோ எனது ஈழநிலைப்பாட்டை எழுத இருக்கிறேன். நான் தொடர்ச்சியாக தினமலரையும், துக்ளக்கையும் படித்து வந்ததால் எனக்கு விடுதலைப்புலிகளின் மீது ஒரு வெறுப்பு இருந்து வந்தது. ஆனால் அப்போதும் ஈழப்பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வாக இருக்க முடியுமென்று நினைத்து வந்தேன். தமிழ் நெட்டில் ஒரு குடும்பம் படுகொலை செய்யப்பட்ட செய்தியை புகைப்படத்துடன் பார்த்ததன் பின் நான் அறியும் செய்திகளெல்லாம் ஒரு தலைப்பட்சமானவையோ என்று தோன்ற ஆரம்பித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைப்புலிகளின் மீது எனக்கு கரிசனத்தைத் தோற்றுவித்தது. பிறகு நான் சந்தித்த இலங்கைத்தமிழர்கள் கூறியவைகளை வைத்து எனக்கு இந்தியாவில் அறியத்தந்த செய்திகளெல்லாம் எவ்வளவு பாரபட்சமானவை என்று தெரியவந்தது. இப்போது எனது ஈழநிலைப்பாடானது ஒரு சராசரி ஈழத்தமிழரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. இதைப்பற்றியும் எழுத இருக்கிறேன்.

6. சில சாமியாடிகளும் நாங்களும்: எனது நெருங்கிய நண்பர்கள் சிலரும், எனது கல்லூரித்தோழர்கள் சிலரும் உத்தரகோசமங்கைக்கு சென்ற ஓர் அனுபவ நிகழ்வை எழுதலாமென்றிருக்கிறேன்.

7. வட இந்தியரின் தமிழ்: வட இந்தியர்கள் எப்படி தமிழ், தமிழர்வரலாறு மற்றும் தமிழைப்பற்றி தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது பற்றி எனது அனுபவத்திலிருந்து எழுதலாமென்றிருக்கிறேன்.

8. முகமூடி மற்றும் பெயரிலி: இவர்கள் இரண்டுபேருடைய கருத்துக்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. இருந்தபோதிலும் இருவருடைய எழுத்துக்களிலும் உள்ள நையாண்டி எனக்கு ஒன்று போலவே தோன்றுகிறது. மூகமூடியின் எழுத்துக்கள் பெரும்பாலும் எனக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களையே தாங்கி வருகின்றன. எனினும் அவருடைய எழுத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கிறது. பெயரிலின் எழுத்திலும் அதிகளவில் ஈர்க்கக்க்கூடிய அம்சங்கள் இருக்கின்றன. இருவரின் பதிவுகளும் நான் விரும்பி படிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இதைப்பற்றி எழுத நினத்துவைத்திருக்கிறேன். இது அளவில் அவ்வளவு பெரியதாக இருக்க வாய்ப்பில்லை.

9. எனது பதின்மூன்றாவது காதலியும் சில கடலைகளும்: முதலும் இதுவரை கடைசியுமாக என்னிடம் ஒரு தோழியாக பழகிய ஒரு பெண்ணின் மீது எனக்கு ஏற்பட்ட காதலையும் இருவரும் தொலைபேசியில் போட்ட கடலைகளையும் அவள் தன் கல்யாணத்துக்கு முதல்நாள் நான் உன்னை காதலித்தேன் எதிர்ப்புகளுக்கு பயந்து வெளிப்படுத்தவில்லை என்று சொன்னதையும் ஓர் இடுகையாக எழுத நினைத்திருந்தேன். இதில் அந்த பெண்ணின் அந்தரங்கமும் இருப்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

இவை நான் கண்டிப்பாக எழுத வேண்டுமென்று நினத்த கட்டுரைகள். இவை போக நான் எழுத நினத்தவை பலவற்றை நிச்சயம் எழுதுவேனென்று சொல்வதற்கில்லை. பதங்கமான அவை பதங்கமானவைகளாகவே போகக்கூடும்.

Friday 24 August 2007

பேரழகன்


இந்த இளைஞனின் கண்களை பார்த்தீர்களா? ஒரு பேரொளி தெரிகிறதில்லையா?

Friday 13 July 2007

நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும்

வேலு குடும்பத்தினருடன் அந்த வீட்டுக்கு குடிவந்தபோது அக்கம் பக்கத்து வீடுகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. நாங்களும் இன்னும் சில குடும்பங்களுமே இருந்தோம். எங்க அப்பாவின் அலுவலகத்திலேயே அவரும் வேலை செய்ததனால் மற்றவர்களைவிட நாங்கள் கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தோம். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் பிரியா. என் தம்பி வயது. இரண்டாமவள் ஜான்சி. என் சித்தி பெண் வயது. கைக்குழந்தை. ரொம்ப அழகு. ஆனால் அந்த குழந்தையைவிட அடுத்த வீட்டு ஜெயந்தியையே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் ஜான்சி கருப்பு. ஆனால் இரண்டு குழந்தைகளையும் பார்த்தால் கொஞ்சாமல் போக மாட்டேன். அவர்கள் வீட்டு அரிசியின் நடுவில் செந்நிறத்தில் ஒரு கோடு இருக்கும். அவர்கள் நிலத்தில் விளைந்தது அப்படித்தான் இருக்கும் என்றார்கள். அவர்கள் அம்மாவை பார்க்கும்போது எனக்கு நடிகை ரேவதிதான் எனக்கு நியாபகம் வரும். ஆனால் என்ன கொஞ்சம் கருப்பு. அக்கம்பக்கத்தில் எங்க அம்மா மட்டுமே அவர்கள் வீட்டுக்கு போய் பேசுவார்கள். மற்ற வீட்டுப்பெண்கள் யாரும் போவதில்லை. வேலுவின் மனைவி கொஞ்சம் அதிரடியாக பேசக்கூடியவர். ரொம்ப நாகரீகம். ஒரு முறை நான் வீட்டு வாசலில் டவுசரைத் தூக்கு ஒண்ணுக்கு போய்க்கொண்டிருந்தபோது வீட்டுக்குப் போடா. வீட்டுலதான் கக்கூஸ் இருக்குல. இவ்வளவு வளந்திருக்க அறிவில்ல என்று திட்டியதற்கு பின் நான் பொதுவிடங்களில் ஒண்ணுக்குப் போக கூச்சப்பட ஆரம்பித்தேன். இப்படி எனக்கு எங்க அம்மா எப்போதும் நாகரீகம் கற்றுத்தந்ததில்லை.
பிரியாவும், ஜான்சியும் எங்க வீட்டுக்கே டிவி பார்க்க வருவார்கள். பக்கத்தில் ஒரு இஸ்லாமிய வீட்டுக்கு டிவி பார்க்கப் போனபோது அவர்கள் ஜாதியை சொல்லி திட்டி விட்டார்கள். அதிலிருந்து அங்கு போவதில்லை. பிரியா என்னை உரசிக்கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்க்கும். எனக்கு அது ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு ஆண்டு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டுக்கு வரும் தர்ஷினியையே பிடிக்கும். தேவதையை போல் இருப்பாள். மற்ற குழந்தைகள் எல்லாருக்கும் தர்ஷினியின் கவனத்தை கவருவதிலேயே விருப்பம் இருக்கும் எனக்கும்தான். அப்போது விளையாட்டுக்களில் பிரியா தனித்தே இருப்பாள். எனக்கு பாவமாக இருந்தாலும் அப்போதைய ஆர்ப்பாட்டத்தில் பரிதாபப்படக்கூட நேரம் இருக்காது. எங்க அம்மாவுக்கு தர்ஷினியை ரொம்ப பிடிக்கும். தாயில்லாப்பெண் என்பதால் கொஞ்சம் கூடுதல் பரிவு. தர்ஷினிக்கும் எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். அந்த குடியிருப்பில் அவளிடம் அவ்வளவு பரிவாக இருப்பது எங்க அம்மா மட்டுமே. அதை அவளே சொல்லியிருக்கிறாள். தர்ஷினி போன பிறகு அவளைப்போலவே பிரியா பேசுவாள். எனக்கு எரிச்சலாக வரும்.
பிரியா வீட்டுக்கும் மற்றவர்களுக்கும் எப்போது சண்டை வந்து எப்போது பேசுவதை நிறுத்தினார்கள் என்றெல்லாம் எனக்கு நினைவில்லை. நாங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அதனால் எங்க வீட்டாரிடம் அவ்வப்போது குற்றம் குறை காண ஆரம்பித்தார்கள். ஒரு விடுமுறைநாள் மதியம் எல்லா குழந்தைகளும் தூங்கிகொண்டிருந்தார்கள். நான் ஒற்றை ஆளாக பந்தை தூக்கிப்போட்டு கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். ஒரு அடி. ஏதோ நடக்கக்கூடாதது நடக்க போகிறதென்று என் உள் மனது சொல்லியது. நடந்தே விட்டது. எங்கள் குடியிருப்பில் எங்களுக்கு அடுத்திருந்த வீட்டின் சன்னல் கண்ணாடி உடைந்து விட்டது. உடைத்து விட்டு எங்கள் வீட்டு கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டேன். எங்க அம்மா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கிறார்கள் என்னடா செஞ்சிட்டு வந்த என்று. சன்னல் கண்ணாடியை உடைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது உங்களுக்கு தெரியாது. அதற்கு நீங்கள் பன்னிரண்டு வயதுக்கு திரும்ப வேண்டும். என் அம்மாவின் கற்பு, என் அப்பாவின் ஆண்மை பற்றிய குறுக்கு விசாரணைகளெல்லாம் எதிர்த்த வீட்டு பதினான்கு வயது பையன் செய்வான். அந்த சமர் ஒரு வாரம் நீடித்தது. நான் வீட்டில் இல்லாதபோதே சண்டை நடக்கும். நான் இருந்தால் மட்டும் என்னவோ கிழித்துவிடுவதைப்போல.
எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. நான் சன்னல் கண்ணாடியை உடைத்தது அவர்களுக்கு ஒரு சாக்கு மட்டுமே என்று. அதன் பிறகு அந்த குடியிருப்பில் யாரும் எங்களுடன் பேசவில்லை. எங்களுக்கு வேலுவின் வீடே துணை. வேலுவின் மனைவி எதற்கும் கலங்கியதாக எனக்கு நினைவில்லை. அண்டை வீட்டார் பேசாதது அவர்களிடம் எத்தகைய வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நாங்களே நொந்து போயிருந்தோம். கொஞ்ச நாளில் வேலு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டி குடிபோய்விட்டார். குடிசைகள் உள்ள இந்த இடத்தில் ஏன் குடி போனார்கள் என்று எனக்கு புரியவில்லை. என் அம்மாவோ அப்பாவோ அது பற்றி ஒரு கேள்வி கூட அவர்களை கேட்கவில்லை.
அவர்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு இன்னொரு குடும்பம் குடிவந்தது. அந்த குடும்பத்தில் அம்மா மட்டுமே கறுப்பு. மற்றவர்கள் எல்லாம் சிவப்பு. அதிலும் குட்டிப்பையன் ரொம்ப அழகு. இந்த முறை அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளும் வயது வந்துவிட்டது. அந்த வீட்டுக்கு இனி தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டவர்களே வருவார்கள் என்பதும் எனக்கு புரிந்து விட்டது. வேலுவின் மனைவியைப் போலவே இந்த குடும்பத்தலைவரும் ரொம்ப அதிரடி. இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. இப்போது பிரியா எதோ பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்து விட்டாளாம். வேலு மாரடைப்பில் இறந்துவிட்டாராம்.

*************************************************************

எப்படி பெண் வேண்டும் என்று கேட்கிறார்கள்
என் தோளில் சாய்ந்து ஒரு பூனையைப் போல உறங்கும் பெண் வேண்டாம்
என் மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு
என் கைகளை சிறைப்படுத்தி
வெற்றிச்சிரிப்பு சிரிக்கும் தேவி வேண்டும் என்று
எப்படி சொல்வேன்.

*************************************************************

உங்கள் குதிரைகளை விட்டுவிட்டு வாருங்கள்
ரதயாத்திரை போகலாமென்கிறீர்கள்
குதிரைகளுடன் குதிரை ஊர்வலம் போகலாமென்றேன்
காமெடி கீமெடி பண்ணலையே என்கிறீர்கள்

என்னைப் போல உடை உடுத்திக்கொண்டு வா
விருந்துக்கு போகலாமென்கிறீர்கள்
நேற்று தனிமையில் நீங்கள்
நன்றாக இருக்கிறதென்று சொன்ன
என் உடைகளை என்ன செய்வது என்று கேட்டால்
கோபம் வருகிறது.

எனக்குத் தெரியாமல்
என் பூசையறையில் எடுத்த
ரோசமலரை சட்டையில் செருகிக்கொண்டீர்கள்
விருந்தில் யாராவது அதைப் பற்றி பேசினால்
உங்களுக்கு பிடிப்பதில்லை

Wednesday 11 July 2007

இடுகை - 4

தோழனே! நான் உனக்கு செய்தது போல
காறி உமிழ்ந்து விடு என் முகத்தில்
நம் எதிரி பார்ப்பதற்கு முன்.
**********************************************
கண்ணை மூடினால்
என் கனவு தேவதை என் முன்னால்
கைகளை அலைத்து, கண் சிமிட்டி புன்னைகைக்கிறாள்.
கண் திறந்தால் தெருவெங்கும் தேவதைகள்.
எங்கே இருக்கிறாள் என் தேவதை.
**********************************************
யாரும் எடுக்க வேண்டாம்
இது நான் கசக்கிப் போட்ட காகிதம்
**********************************************
ஈயடிப்பானில் குவிந்திருந்த ஈக்களை அள்ளி
குப்பையில் போடப்போகும் வழியில்
எதிர்ப்படும் கசாப்புக் கடையைப் பார்த்தால்
குமட்டிக்கொண்டு வருகிறது
காபிக்கடை ஐயருக்கு.

Saturday 12 May 2007

தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சி





இந்த படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று எனக்கு நினைவில்லை. ரொம்ப காலமாக எனது கணினியின் மைபிக்சர்ஸில் இருந்தது.

உலக மொழிக்குழுக்கள்


இந்த படம் விக்கிபீடீயாவிலிருந்து எடுத்தது.

Friday 11 May 2007

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் மற்றும் ஆட்சிமொழி

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மறுத்து எழுதும் அளவுக்கு நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்களின் வழக்கமான பரப்புரை உத்தி இதற்கு எதாவது பதில் எழுத வேண்டும் என்று என்னை உந்தி தள்ளியது. இது இப்போதைக்கு பொதுப்பார்வையில் வைக்கப்படாது. என்றாலும் ஒரு நாள் இது திரட்டிகளில் இடப்படும்.

// அது சர்வ தேச மக்கள் மொழியாகப் பல்வேறு ரூபங்களில் வழக்கத்தில் இருந்து வருவதை மொழியியலாளர் அறிவார்கள் //


சமஸ்கிருதம் சர்வதேச மொழி என்று எந்த மொழிவியலாளரும் சொல்வதாக நான் படித்ததில்லை. எனது வாசிப்பு அனுபவத்தில் (கொஞ்சம் குறைவானதுதான்) நான்கண்ட வரை சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே சொல்லப்படுகிறது. ஒரு மூல ஐரோப்பிய மொழியிலிருந்தே பண்டைய ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் கிளைத்தன. அம்மொழிகளைப்போலவே சமஸ்கிருதமும் கிளைத்திருக்கலாம் என்றே ஒரு கருதுகோள் வைக்கப்படுகிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் தோன்றியதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை.
இந்துத்வவாதிகள் அடிக்கடி சொல்வது, சமஸ்கிருதத்திலிருந்தே அனைத்து ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் தோன்றின. அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் பண்டைய மற்றும் தற்போதைய ஐரோப்பிய மொழிகளில் காண்ப்படுகின்றன. நான் ஒரு கேள்விகேட்கிறேன். நிறைய ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் புழங்குகின்றனவா? அல்லது நிறைய ஐரோப்பிய மொழி வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் புழங்குகின்றனவா?
இந்தியாவிலிருந்து ஒரு மொழி உலகம் முழுவதும் பரவியதென்றால் ஒரு இந்தியனாக எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அதை நிறுவ முயலுபவர்கள் பொய்யான தரவுகளை வைக்கிறார்கள் அல்லது வேண்டுமென்றே ஒரு பரப்புரையை நிகழ்த்துகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துத்வவாதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் போன்ற தொன்மையும், பழமையும் இலக்கண, இலக்கியச் சிறப்புகளும் உடைய மொழிகளின் தனிச்சிறப்பை மறுக்கிறார்கள். தமிழும் சமஸ்கிருத்திலிருந்தே தோன்றியதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்க முயலுகிறார்கள். அது முடியாததால் மிகவும் தடுமாறுகிறார்கள். திராவிட மொழிகளின் தனிச்சிறப்பை வெளியில் கொண்டுவந்த கால்டுவெல் போன்றோரை காழ்ப்புனர்ச்சியோடு இகழ்கிறார்கள். சமஸ்கிருதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து மற்ற மொழிகளை அல்லது மற்ற மொழிகளை பேசுபவர்களை சமஸ்கிருத்ததை நோக்கி தொழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சங்கங்கள் வைத்து வளர்த்த தமிழை அவ்வாறு செய்துவிட முடியாது எனபதை அவர்கள் உணர்வதில்லை.
தமிழும் இந்தியாவின் மொழிதான். சமஸ்கிருதத்தைப் போன்று இலக்கண இலக்கிய வளங்கள் உடைய மொழி. சமஸ்கிருதத்தைவிட ஒரு படி மேலாக இந்தியாவில் தோன்றியதாக அனைவராலும் நம்பப்படும் ஒரே மொழி. தொன்மையாலும், இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும், வேறு எந்த பிறநாட்டு மொழிகளின் தாக்கம் இல்லாததுமான தமிழுக்கு இல்லாத சிறப்பு ஒன்றும் சமஸ்கிருதத்துக்கு இல்லை. இங்கே இந்திய தேசியம் பேசுபவர்கள் உண்மையில் நமது நாட்டின் சிறப்பான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் தமிழுக்கு அதற்குரிய இடத்தை முதலில் பெற்றுத்தரட்டும். யாராலும் பேசப்படாத ஒரு மொழிக்கு ஆட்சிமொழியாகும் தகுதி இருக்கிறதென்றால் அதை விட அதிக தகுதி இந்தியாவில் தோன்றிய, இன்றைக்கும் பேசப்படும் உலகத்தின் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு நிரம்பவே இருக்கிறது.

// நம் நாட்டிலுங்கூடப் பல்வேறு மொழி பேசும் சாதாரண மக்களிடையே ஏராளமான சமஸ்க்ருதச் சொற்கள் வெகு இயல்பாக நடமாடி வருகின்றன //


சம்ஸ்கிருத சொற்கள் இயல்பாக எப்படி சாதாரண மக்களிடம் புழங்க முடியும். இயல்பாக நடமாடுகிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் இவைதான் இந்திய மொழிகளில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை உருவாக்கியது. ஆகவேதான் வட இந்தியரின் கைக்கு எட்டாத தமிழகத்தில் குறைவாக இருந்தது. வட இந்தியரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றை தமிழகத்தில் தடுத்தது நிறுத்தியது மேற்குத் தொடர்ச்சி மலையே ஆகும். இப்படியெல்லாம் ஒரு மொழி பரவுவது இயல்பானதுதானென்றால் ஆங்கிலேயரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றினால் உருவான ஆங்கில ஆதிக்கமும் ஆங்கில நாகரீகமும் கிருத்தவமும் இயல்பானதுதான். இதை ஒத்துக்கொள்கிறீர்களா?


// அவையில் சமஸ்க்ருதத்தின் அருமை அறியாதவர்கள் அதிகம் இருந்ததால்//


இதையே நான் உங்களுக்குத் திருப்பிச்சொல்லுகிறேன். தமிழர்களாக இருந்தும் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் தமிழின் அருமை அறியாமல்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் தமிழர்களின் மொழி மட்டுமல்ல. இந்தியாவின் பெருமை.

Tuesday 17 April 2007

வலைப்பதிவுகளுடனான எனது அறிமுகம்-1

ஏதாவது எழுத வேண்டுமென்றால் முதலில் இந்த வலைப்பதிவுகள் எனக்கு எப்படி அறிமுகமாயின எனபதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். இப்போது நான் எழுதும் எதையும் நான் எந்த ஒரு திரட்டியிலும் இடுவதாக இல்லை. வேறொரு நாளில் இட்டாலும் இடுவேன். புத்தகங்கள் படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். ஆர்வம் இருக்கும் அளவுக்கு நான் அதிகம் படித்ததில்லை. இதனால் நான் இணையத்தில் படிக்க முயற்சி செய்தேன். அப்போது தமிழ் சிஃபி எனக்கு அகப்பட்டது . அதில் நான் நேசக்குமாரின் "முனிச்" திரைப்பட விமர்சனம் படித்தேன். பிளாக்குகளைப் பற்றி ஒரு முறை தினமலரில் செய்தி படித்திருக்கிறேன். ஆனால் எப்படி பிளாக்குகளை அணுகுவது என்று எனக்கு புரியவில்லை. அதனால் அப்படியே விட்டு விட்டேன். நேசக்குமாரின் பிளாக்கைப் பார்த்த பிறகு பிளாக்குகளை மும்முரமாக தேட ஆரம்பித்தேன். ஒருவரின் பெயரில் இணையப் பக்கம் இருப்பது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ஆனால் நேசக்குமாரின் பக்கங்களையும் நான் அதிகம் படிப்பதில்லை. காரணம் அதில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை பிரவுசிங் சென்டர்களில் திறந்து படிப்பது எளிதாக இல்லை. இப்படி நான் தேடிக்கொண்டிருக்கும் போது எனக்கு தமிழ்.நெட் மாட்டியது. அதுவும் எனக்கு போதுமானதாக இல்லை. அதன் பின் சில சுட்டிகளின் மூலம் எனக்கு தமிழ்மணத்தைப் பற்றி தெரிய வந்தது. அதன் பிறகு நான் வேறொரு உலகத்துக்கு வந்தது போல உணர்ந்தேன். இப்போது நான் முற்றிலும் தமிழ் மணத்திலேயே மூழ்கி கிடக்கிறேன். விவாதங்களைப் படிப்பதிலேயே நான் அதிக நேரம் செலவிடுகிறேன். அனானியாக சில பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன். அதற்கு முன்பே நான் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி விட்டாலும் ஏதும் எழுதவில்லை. இப்போது அதை முற்றிலும் அழித்து விட்டு இந்த பதிவை தொடங்கி இருக்கிறேன். எனது உணமையான பெயரில் எழுத முடியாததற்கு உணமையில் நான் வருந்துகிறேன். என்ன செய்வது உண்மையான பெயரில் எழுதுவதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நான் வேண்டாமென்று நினைத்தாலும் (வேண்டாமென்று நிச்சயம் நினைக்கவில்லை) எப்படியும் ஏதாவது ஒரு விவாதத்தில் மூக்கை நுழைத்து விடுவேன். அதன் பின் பல வசைகளை வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு பயந்தவன் ஏன் வலைப்பதிய வேண்டும் என்று கேட்கிறீர்களா? பயந்தவன் வலைப்பதிவில் எழுதாமல் நேரடியாகவா விவாதம் செய்ய முடியும். விவாதங்களில் எப்போது கலந்து கொளவது? இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னும் நான் என்னை நிறைய தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக நான் விவாதங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நான் முற்றிலும் தயாராகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. யாராவது என்னை கிணற்றுக்குள் தள்ளி விட்டால் கூட நான் கிணற்றுக்குள் குதிக்க வாய்ப்பிருக்கிறது. எப்போது நான் தயார் ஆவேன். என் மொழி நடையை மேம்படுத்திக்கொள்ளும் வரை (அதாவது நான் நினைக்கிறதை நான் நினைத்தபடி எழுதும் வரை) நான் கிணற்றுக்குள் குதிப்பதாக இல்லை.(இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது இதிலேயே சிலவற்றை சேர்ப்பேன். )